தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (ஏப்ரல் 23) நடைபெற உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் பணிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதி கட்டத் தயார் நிலைகள் குறித்துப் பேசிய மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், இதுவரை 4.81 லட்சம் தபால் வாக்குகள் வெற்றிகரமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த முறை 14.59 லட்சம் பேர் முதன்முறையாகத் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற உள்ளனர். மாநிலம் முழுவதும் உள்ள 75,064 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்துவதற்காக 1,06,418 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. தேர்தல் பாதுகாப்பிற்காக 300 கம்பெனி துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவு முடிந்ததும், 62 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் நடத்தை விதிகளின்படி மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், இதுவரை கணக்கில் வராத ரூ.1,262 கோடி ரொக்கம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சமூக வலைதளங்கள் தீவிரமாகத் தொடரப்பட்டு வரும் நிலையில், விதிகளை மீறியதாக 163 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 2,180 சமூக வலைதளக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. வதந்திகளைப் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அர்ச்சனா பட்நாயக் எச்சரித்துள்ளார். அமைதியான மற்றும் வெளிப்படையான முறையில் தேர்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது.
