திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நாளை (டிச. 9) விசாரணைக்கு வருகிறது.

தமிழ் கடவுள் முருகப்பெருமானின், அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சி பிள்ளையார் கோயிலில் கார்த்திகை தீப நாளில் தீபம் ஏற்றப்படுகிறது. ஆனால் இந்த தீபத்தை, மலையில் உள்ள தீபத்தூணில் ஏற்ற வேண்டும் என்று ராம ரவிக்குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்தார். அந்தப் பகுதியில் சிக்கந்தர் தர்கா உள்ளதாகவும், தீபத்தூணுக்கும், தர்காவுக்கும் குறுகிய இடைவெளி இருப்பதால், அங்கு தீபம் ஏற்றும்பட்சத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றும் அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று கடந்த 1ம் தேதி உத்தரவிட்டார். ஆனால், தீபநாளான 3ம் தேதி வழக்கம்போல் உச்சி பிள்ளையார் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை காட்டி தீபத்தூணில் தீபம் ஏற்ற போலீசார் அனுமதி மறுத்தனர்.

இதனையடுத்து மீண்டும் நீதிமன்றத்தில் ராம ரவிக்குமார் முறையிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மனுதாரரே உடனடியாக தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்றும், அவருக்கு சிஐஎஸ்எஃப் படையினர் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அதனால் அவர்கள் சென்ற போது, போலீசார் தடுத்தனர். உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தமிழ்நாடு அரசு மேல் முறையீடு செய்ய உள்ளதால், தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்க முடியாது என்று போலீசார் மறுத்தனர்.

இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு, தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.  இதனையடுத்து மனுதாரர் ராம ரவிக்குமார், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மனுவை தாக்கல் செய்தார். அதனை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், கடந்த 4ம் தேதி மாலை 7 மணிக்கு தீபத்தூணில் மனுதாரர் உள்ளிட்ட 10 பேர் சென்று தீபம் ஏற்றலாம் என்றும் அதற்கு காவல் ஆணையர் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இதனையடுத்து, மனுதாரர் ராம ரவிக்குமார் தீபம் ஏற்றச் சென்றனர். அப்போது தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜகவினர், இந்து முன்னணியினர் உடன் சென்றனர். அவர்களை அப்போது தடுத்த போலீசார், உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய உள்ளதால் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்க முடியாது என்று மறுத்தனர். இதனையடுத்து ஏற்பட்ட பரபரப்பான சூழலால் நயினார் நாகேந்திரன் உள்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.

இந்தநிலையில், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உத்தரவை நிறைவேற்றாததால் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நாளை (டிச. 9) விசாரணைக்கு வர உள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version