சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர் வனக்கோட்டத்தில் உள்ள 10 வனச்சரகங்களில் 6 நாட்கள் நடைபெறும் மழைக்கு பிந்தைய குளிர்கால புலிகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது.
நாடு முழுவதும் புலிகள் கணக்கெடுப்பு என்பது புலிகள் எண்ணிகையை கண்டறியும் முக்கிய பணியாகும். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள சத்தியமங்கலம், பவானிசாகர், விளாமுண்டி, டி.என்.பாளையம், கடமபூர், கேர்மாளம், ஆசனூர், தலமலை, தாளவாடி என 10 வனச்சரங்களில் குளிர்கால வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி துவங்கியது. தொடர்ந்து 6 நாள்கள் நடைபெறும் கணக்கெடுப்பில் அந்தந்த வனச்சரகங்களில் பணியாற்றும் வனக்காப்பாளர், வனக்காவலர் மற்றும் 2 வேட்டைத்தடுப்பு காவலர்கள் என 4 பேர் கொண்டு அமைக்கப்பட்டது.
10 வனச்சரகங்களில் மொத்தம் 76 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு 304 பேர் கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளனர். கணக்கெடுப்பின்போது அதிநவீன கேமராக்கள், எம்ஸ்டிப் செயலி, ரேஞ்ச் பைன்டர், காம்பஸ் ஜி.பி.எஸ் கருவி போன்ற கருவிகள் கையாளப்பட்டது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் வனத்தில் புலிகள் நடமாடும் பகுதியில் சேகரிக்கப்படும் புலிகள் கால்தடம், எச்சம், கீறல், நேரடியாக பார்த்தல் மற்றும் கேமரா பொருத்தி அதன் வழியாக நடந்து செல்லும்போது புலிகளை பதிவு செய்தல் மூலம் புலிகள் எண்ணிக்கை கணக்கிடப்பட்டது.
புலிகள் எண்ணிக்கையின் அடிப்படையில் அவற்றிக்கான தேவையான பாதுகாப்புகளை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் அதிகப்படுத்துவும் புலிகள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு அதன் வாழ்விடத்தை மேம்படுத்தி, மனித விலங்கு மோதலை தடுக்க போதிய நடவடிக்கை எடுக்கவும் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
சத்தியமங்கலம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பண்ணாரி வனப்பகுதியில் புலிகள் நடமாடும் பகுதியில் வனத்துறையினர் இன்று 2வது நாளாக கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டபோது அப்பகுதியில் அரிய வகை நட்சத்திர ஆமை நடமாடுவதை கண்டு அதனை அதிகாரிகள் வனவிலங்கு கணக்கெடுப்பு பதிவேட்டில் பதிவு செய்தனர்.
மேலும் அப்போது அந்த நட்சத்திர ஆமையானது சிறுத்தையின் எச்சத்தை உணவாக உட்கொண்டது. நட்சத்திர ஆமைகள், புலி, சிறுத்தை போன்ற விலங்குகளின் எச்சத்தை உணவாக உட்கொள்ளும் குணாதிசயம் உடையவை என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஆய்வுபடி , அங்கு சிறுத்தை, புலிகள் உலாவுவதை உறுதிபடுத்தி உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
