புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்த நிலையில் புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் விசைப்படகுகளும் கட்டுமாவடி, புதுக்குடி, ஆர்.புதுப்பட்டிணம், முத்துக்குடா போன்ற நாட்டுப் படகு மீனவர்களும் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்லக்கூடாது என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி படகுகளை பாதுகாப்பான இடத்தில் கரையேற்றி வைக்கவும் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தி வைக்குமாறு மீன்வளத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
