தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு சற்று தாமதமாக வந்தபோதிலும், அதன் தீவிரம் நகரத்தை முழுமையாக பாதித்துள்ளது. நேற்று இரவு முதல் தொடர்ந்த கனமழையால் தலைநகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்து, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
நான்கு மாடி கட்டிடம் ஒன்று மழைநீரின் அழுத்தத்தால் இடிந்து விழுந்த சோக சம்பவம் ரோகிணி பகுதியில் நிகழ்ந்தது. இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்தச் சம்பவம் மழையின் தீவிரத்தை மேலும் எடுத்துக்காட்டுகிறது.இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடக்கத்தில் பருவமழை பெய்யத் தொடங்க வேண்டியிருந்த நிலையில், அது கணிசமாக தாமதமானது.
ஜூன் மாதத்தின் இரண்டாவது வாரம் வரை பெரிய அளவில் மழை பதிவாகவில்லை. எனினும், ஜூலை முதல் வாரத்திலிருந்து மழை தீவிரமடைந்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் சீற்றம் காட்டி வருகிறது. மகாராஷ்டிராவில் சமீபத்தில் ஏற்பட்ட கனமழை பாதிப்புகளுக்குப் பின், இப்போது டெல்லி மற்றும் வட இந்தியா முழுவதும் மழை வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் பல இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது.
சப்தர்ஜங் பகுதியில் 72.6 மி.மீ., லோதி ரோடு 80.2 மி.மீ., ரிட்ஜ் 77.8 மி.மீ., பாலம் 63 மி.மீ. மற்றும் அயனாகர் 57.4 மி.மீ. என அதிக மழைப்பொழிவு நிகழ்ந்துள்ளது. இதனால் கிரேட்டர் கைலாஷ், நாசிர்பூர், மகாவீர் பஜார், விகாஸ் மார்க், கிழக்கு டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. முக்கிய சாலைகளான ரிங் ரோடு, அவுட்டர் ரிங் ரோடு, டெல்லி-நொய்டா எக்ஸ்பிரஸ்வே மற்றும் தேசிய நெடுஞ்சாலை 48 ஆகியவற்றில் பல கிலோமீட்டர் தூரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. ஈஸ்ட் ஆஃப் கைலாஷில் இஸ்கான் கோயில் அருகிலும், நேஷனல் ஹார்ட் இன்ஸ்டிடியூட் முன்பும் பெரிய மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. புறநகர் குருகிராமிலும் கனமழை தாக்குதல் தொடர்கிறது. அங்கு முக்கிய சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி வாகனங்கள் சிக்கின. டெல்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் கடும் நெரிசல் நிலவியது.இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளபடி, இமயமலை அடிவாரப் பகுதிகளை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலமே இந்த பரவலான மழைக்குக் காரணம்.
இந்த அமைப்பு மேலும் வடக்கே நகரும் வரை அடுத்த இரு நாட்களுக்கு கனமழை தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ள டெல்லியில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மழையால் சில நன்மைகளும் உள்ளன. டெல்லியின் காற்றுத் தரக் குறியீடு இன்று காலை 61 ஆகக் குறைந்து, ஓரளவு சுவாசிக்கும் தகுதியைப் பெற்றுள்ளது. எனினும், வெள்ளம் மற்றும் உயிரிழப்புகள் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.
