செண்பகவல்லி தடுப்பணையை மீண்டும் கட்ட வலியுறுத்தி வருகிற ஜூன் 5-ஆம் தேதி அன்று வாசுதேவநல்லூரில் வைகோ உண்ணாவிரத அறப்போர் மேற்கொள்கிறார்.
மதிமுக நிறுவனர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உலகின் பாரம்பரியச் சின்னங்களுள் ஒன்றாக (Unesco heritage site) ஐ.நா. மன்றத்தால் அறிவிக்கப்பட் டுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளின் நீர்பிடிப்புப் பகுதிகளில் இருந்து பெருக்கெடுத்து ஓடுகின்ற தொன்மையான ஆறுகளுள் ஒன்று செண்பகவல்லி.
தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிவகிரி, சங்கரன்கோவில், விருதுநகர் மாவட்டத்தின் இராசபாளை யம் வட்டாரத்தில் பாசனத்திற்கும், குடி நீருக்கும் செண்பகவல்லி ஆற்றுத் தண்ணீர்தான் ஊற்றாகத் திகழ்கின்றது. இந்தப் பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு முதன்மையான குடிநீர் ஆதாரமும் செண்பகவல்லித் தண்ணீர் தான்.
ஆற்றுத் தண்ணீரை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்கின்ற வகையில், செண்பகராமன் பிள்ளை அவர்கள், ஒரு சிறிய அணையைக் கட்டினார்கள். அந்த அணை தற்போது கேரள மாநிலத்தின் எல்லைக்குள் இருக்கின்றது.
1773ஆம் ஆண்டு கட்டப்பட்ட அந்த அணையில் தேக்கப்படுகின்ற தண்ணீர், ஆண்டு முழுமையும் விவசாயத்திற்குப் பயன்படுகின்றது. இரண்டு மாநில விவசாயிகளும் பயன்பெறத் தக்க வகையில், செண்பகவல்லி ஆற்று நீரைப் பிரச்சினை இன்றிப் பகிர்ந்து கொண்டு வருகின்றார்கள்.
1935 ஆம் ஆண்டு செண்பகவல்லி அணையில் சிறிய அளவில் விரிசல்கள் ஏற்பட்டுப் பழுதாயிற்று. முதன்மைக் கால்வாயின் ஒரு பகுதி உடைந்து போயிற்று. இதன் விளைவாகத் தமிழகத்திற்குக் கிடைத்து வந்த தண்ணீர் கிடைக்காமல் போயிற்று. அதனால் விவசாயம் பாதிக்கப்பட்டது.
1955ஆம் ஆண்டில் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பு வகித்த பெருந்தலைவர் காமராசர் அவர்கள், செண்பகவல்லி அணையைப் பழுது பார்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். கேரள அரசும் ஒத்துழைப்பு நல்கிற்று. ஓரளவிற்குப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுத் தண்ணீர் வரத்து சீர் செய்யப்பட்டாலும், உடைந்து போன முதன்மைக் கால்வாய் முழுமையாகக் கட்டி முடிக்கப்படவில்லை. எனவே, ஆயக்கட்டுதாரர்கள் விவசாயப் பணிகளை மேற்கொள்ள இயலவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து செண்பகவல்லி தடுப்பணை கட்டுவதற்காக அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும் தான் மேற்கொண்ட நடவடிக்கைகளை குறிப்பிட்டுள்ள வைகோ,
தற்போது சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், சிவகிரி வட்டார விவசாயிகள் நலனைக் காக்க ஆயிரம் ஆயிரம் ஏக்கர் நன்செய் நிலங்கள் பாசனம் பெற உள்ளாறு அணைக்கட்டுத் திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் எனக் கோரியும்,
காட்டுப் பன்றிகளின் அட்டகாசத்தால் பெரிதும் பாதிக்கப்படுகின்ற விவசாயிகள் நலனைக் காக்க காட்டு விலங்குகள் பட்டியலிலிருந்து காட்டுப் பன்றிகளை நீக்க மத்திய அரசை தமிழக அரசு வற்புறுத்தக் கோரியும்.
செண்பகவல்லி தடுப்பணையை மீண்டும் கட்டுவதற்குரிய நடவடிக்கைகளை தமிழக அரசு, கேரள அரசோடு பேசி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வருகிற ஜூன் 5 ஆம் தேதி அன்று வாசுதேவநல்லூரில் என்னுடைய தலைமையில் விவசாயிகள் உண்ணாவிரத அறப்போரை மேற்கொள்ள இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
