பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையின் புகைப்படத்துடன் தலைவா தரணி ஆள வா என அழைப்பு விடுத்து கோவையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பாஜகவில் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக பா.ஜ.க-வின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பிறந்தநாள் வருகிற ஜூன் மாதம் 4-ஆம் தேதி (04.06.2026) கொண்டாடப்பட உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் பல்வேறு அரசியல் நகர்வுகளுக்குப் பிறகு அண்ணாமலையின் இந்த ஆண்டு பிறந்தநாளைக் கோவையில் உள்ள அவரது ஆதரவாளர்களும், பா.ஜ.க தொண்டர்களும் மிகவும் பிரம்மாண்டமாகக் கொண்டா தயாராகி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, பா.ஜ.க-வின் முன்னாள் கோவை மாநகர் தலைவரான உத்தம பாலாஜி ராமசாமி, தனது “உத்தம் பவுண்டேஷன்” (Uthama Foundation) அமைப்பின் சார்பில் கோவை மாநகர் முழுவதும் அண்ணாமலையை வாழ்த்திப் பிரம்மாண்ட போஸ்டர்களை ஒட்டி உள்ளார்.
சிங்காநல்லூர், அவிநாசி சாலை, உள்ளிட்ட மாநகரின் அனைத்து முக்கியப் பகுதிகளிலும் இந்த போஸ்டர்கள் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளது அதில், “எங்கள் தலைவா தரணி ஆள வா….!” என்ற கம்பீரமான வாசகங்கள் அச்சிடப்பட்டு, அண்ணாமலையின் பிரம்மாண்ட படங்களுடன் ஒட்டப்பட்டு உள்ளது.
“தமிழக அரசியலில் அண்ணாமலை மீண்டும் முழு வீச்சில் தனது தலைமைப் பொறுப்பை ஏற்று வழி நடத்த வேண்டும்” என்ற தொண்டர்களின் நீண்ட நாள் ஆதங்கத்தையும், எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தும் வகையில் இந்த வாசகங்கள் அமைந்து உள்ளதாகப் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கோவை நாடாளுமன்றத் தொகுதியில் அண்ணாமலை போட்டியிட்டது முதலே கோவை மாவட்ட தொண்டர்களுக்கும் அவருக்குமான பிணைப்பு பல மடங்கு அதிகரித்து உள்ளது. இந்நிலையில், ஜூன் 4-ஆம் தேதி அவரது பிறந்தநாளை ஒட்டி கோவையில் ஒட்டப்பட்டு உள்ள இந்த “தரணி ஆள வா” போஸ்டர்கள், சமூக வலைதளங்களிலும் அண்ணாமலையின் ஐ.டி விங் (IT Wing) மூலமாக “டிரெண்டிங்” ஆக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழக பாஜக தலைவர் பதவி அண்ணாமலையிடம் இருந்து பறிக்கப்பட்டு நயினார் நாகேந்திரனுக்கு கொடுக்கப்பட்டபோதே, கொங்கு மண்டலத்தில் புகைச்சல் கிளம்பியிருந்தது. அண்ணமலை இருந்திருந்தால் நிச்சயம் இந்ததேர்தலில் கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க முடியும் எனக் கூறும் அண்ணாமலை ஆதரவாளர்கள், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று நயினார் நாகேந்திரன் தலைவர் பதவியை விட்டு வெளியேற வேண்டும். அண்ணாமலையை மீண்டும் தலைவராக்க வேண்டும் எனக் கூறி வருகின்றனர்.
