கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே, காட்டு யானை தாக்கியதில் வடமாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு கால் உடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேன்கனிக்கோட்டை வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக நான்கு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் அவ்வப்போது விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தி வருவதால், பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இந்நிலையில், ஆலஹள்ளி பகுதியில் உள்ள நர்சரி பண்ணை ஒன்றில் வேலை பார்த்து வந்த ரீமா (18) என்ற வடமாநில இளம்பெண்ணை, எதிர்பாராத விதமாக காட்டு யானை தாக்கியது.
யானையின் தாக்குதலில் ரீமாவின் இடது கால் பலத்த காயமடைந்து சுக்குநூறாக நொறுங்கியது. ரத்த வெள்ளத்தில் துடித்த அந்தப் பெண்ணைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர், அவரை மீட்டு உடனடியாக மேடு இருதிக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, வனத்துறையினரின் உதவியுடன் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாகவே இந்த யானைகளின் நடமாட்டம் அப்பகுதியில் அதிகரித்து வருவதாகவும், இதனால் நிம்மதியாக வெளியே வரக்கூட முடியவில்லை என்றும் கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்தச் சம்பவத்தை அடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், வனப்பகுதிக்குள் யானைகளை விரட்டவும் வனத்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
