டெல்லியில் இருந்து லண்டன் புறப்பட இருந்த ’ஏர் இந்தியா’ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லி விமான நிலையத்தில் இருந்து ’ஏர் இந்தியா’ நிறுவனத்திற்கு சொந்தமான ஏ.ஐ.2017 என்ற விமானம் லண்டன் செல்வதற்கு தயாராகிக் கொண்டிருந்தது. விமானம் புறப்பட தயாரான போது, விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானத்தின் டேக்-ஆப் ரத்து செய்யப்பட்டது. விமானத்தை விமானிகள் ஓடுபாதையின் மற்றொரு பகுதிக்கு கொண்டு வந்து நிறுத்தினர். விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விமான பயணம் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ’ஏர் இந்தியா’ நிறுவனம் தெரிவித்துள்ளது.