கேரள சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆளும் இடதுசாரி முன்னணிக்கு (LDF) கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு ஆட்சியைத் தக்கவைத்து வரலாற்றுச் சாதனை படைத்த சிபிஎம் தலைமையிலான கூட்டணி, இந்த முறை தபால் வாக்கு எண்ணிக்கையிலிருந்தே சறுக்கலைச் சந்தித்தது. மொத்தமுள்ள 140 தொகுதிகளில் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை பலம் 71 என்ற நிலையில், காங்கிரஸ் கூட்டணி 100 இடங்களை நோக்கித் தனது முன்னிலையை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இது இடதுசாரித் தொண்டர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தேர்தல் முடிவுகளின் மிக முக்கியமான மற்றும் அதிர்ச்சிகரமான திருப்பமாக, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தனது சொந்தத் தொகுதியான தர்மடத்தில் பின்னடைவைச் சந்தித்துள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ஆரம்பம் முதலே முன்னிலை பெற்று வருவது இடதுசாரி முன்னணிக்கு விழுந்த பேரிடியாகக் கருதப்படுகிறது. முதல்வர் மட்டுமல்லாது, அமைச்சரவையில் உள்ள 16-க்கும் மேற்பட்ட முக்கிய அமைச்சர்கள் தங்களது தொகுதிகளில் பின்தங்கியுள்ளனர். மறுபுறம், இடதுசாரிக் கூட்டணி வெறும் 35 முதல் 40 இடங்களுக்குள் மட்டுமே முன்னிலை பெற்று கடும் சரிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
அண்டை மாநிலமான கேரள அரசியலில் மற்றுமொரு ஆச்சரியமாக, இதுவரை பெரிய அளவில் சோபிக்காத பாஜக தலைமையிலான என்.டி.ஏ (NDA) கூட்டணி இந்த முறை 5 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. கேரளாவில் வழக்கமாக நிலவும் இருமுனைப் போட்டியைத் தாண்டி, பாஜகவின் இந்த 5 இடங்கள் அக்கட்சிக்கு நம்பிக்கையளிப்பதாக அமைந்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி மீண்டும் கேரள அரியணையில் அமர்வது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில், ஆளும் தரப்பு அமைச்சர்களின் தொடர் பின்னடைவு அம்மாநில அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்திற்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.
