2026 ஐபிஎல் தொடரின் நேற்றைய 43வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோல்வியைத் தழுவியது. இந்தப் போட்டிக்குப் பிறகு ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் அளித்த பேட்டி தற்போது பேசுபொருளாகியுள்ளது.
இந்த சீசனில் ரன் குவிக்க திணறி வந்த ரியான் பராக், இந்தப் போட்டியில் அபாரமாக விளையாடி 50 பந்துகளில் 90 ரன்கள் குவித்தார். இவரது அதிரடியால் ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 225 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. இருப்பினும், டெல்லி அணியின் தொடக்க வீரர்கள் கே.எல்.ராகுல் (75) மற்றும் பதும் நிசங்கா (62) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால், டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தோல்வி குறித்து பேசிய பராக், “நாங்கள் 200 ரன்களுக்கு மேல் எடுத்தோம், அது நல்ல ஸ்கோர் என்றுதான் நினைத்தேன். ஆனால், மிடில் ஓவர்களில் நாங்கள் இன்னும் சிறப்பாகப் பந்துவீசியிருக்க வேண்டும்” என்று ஒப்புக்கொண்டார்.
மேலும், ஃபார்மில் இருந்த டோனோவன் ஃபெரீராவிற்கு முன்னதாக ரவீந்திர ஜடேஜாவை களம் இறக்கியது குறித்துக் கேட்டபோது, “இடது-வலது காம்பினேஷனுக்காக அந்த முடிவு எடுக்கப்பட்டது. சரியாகத் தெரியவில்லை, இன்னும் 8-9 ஓவர்கள் இருந்ததால் இன்னிங்ஸை நீட்டிக்க நினைத்தோம். அதைப் பற்றி அதிகம் யோசிக்கத் தேவையில்லை” என்று பதிலளித்தார். ஃபெரீரா வெறும் 14 பந்துகளில் 47 ரன்கள் விளாசியது குறிப்பிடத்தக்கது.
தமது காயம் குறித்துப் பேசிய பராக், “இது ஒரு தசைப்பிடிப்பு தான். ஒரு வார ஓய்வு எடுத்தால் சரியாகிவிடும் என்று நம்புகிறேன்” என்றார். தொடர்ந்து தனது ஆட்டம் குறித்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், “நான் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஃபார்மில் இல்லை, இ-சிகரெட் பிடித்தார் என பல விமர்சனங்கள் உள்ள நிலையில், அவர் இவ்வாறு பேசியுள்ளார். மேலும், அணி தோற்றால் தன்னுடைய ரன்களுக்கு மதிப்பு இருக்காது, அணியின் வெற்றியே தன்னுடைய கடமை என்றார்.
