திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் திருமணமான பத்தே மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூன் மாதம் ரிதன்யா என்ற இளம்பெண் வரதட்சணை கொடுமையால் தனது உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில், தற்போது அதே திருப்பூர் மாவட்டத்தில் மற்றொரு இளம்பெண் வரதட்சணை கொடுமையால் தனது இன்னுயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது. தற்கொலைக்கு காரணமான கணவன் குடும்பத்தினரை கைது செய்யாமல் பெண்ணின் உடலை பெற மாட்டோம் என உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர் பிரண்ட்ஸ் கார்டன் பகுதியைச் சேர்ந்த பிரீத்தி என்பவருக்கும், ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரம் பகுதியை சேர்ந்த சதீஷ்வர் என்பவருக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின் போது 120சவரன் நகை, 25 லட்சம் ரூபாய் பணம், 38 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இன்னோவா கார் உள்ளிவற்றை பெண் வீட்டார் வரதட்சணையாக கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பெண்ணின் பூர்வீக சொத்து விற்பனையான வகையில் 50 லட்சம் ரூபாய் பணம் வருவதை அறிந்து, அதனை கேட்டு மாப்பிள்ளை வீட்டார் கொடுமை படுத்தியதாக தெரிகிறது. இதனால், திருமணமான 10 மாதத்தில் வரதட்சணை கொடுமை காரணமாக கணவர் வீட்டில் இருந்து வெளியேறி தாய் வீட்டிற்கு பிரீத்தி வந்துள்ளார். ஒரு மாதமாக மன உளைச்சலில் இருந்த அவர், நேற்று மாலை தாயார் வெளியே சென்ற போது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து பெண்ணின் உடலை மீட்ட நல்லூர் போலீசார் உடற்கூறாய்வு சோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே மாப்பிள்ளை குடும்பத்தார் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி திருப்பூர் மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரனை முற்றுகையிட்ட பெண்ணின் உறவினர்கள், பெண்ணின் கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பிரேதத்தை பெற்றுக் கொள்வோம் என தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.