உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலுக்கு ட்ரோன் மூலம் வரும் ஆபத்துகளை தடுத்து அழிப்பதற்கான பாதுகாப்பு கவசம் நிறுவப்படவுள்ளது. கடந்த மாதம் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பதில் தாக்குதல் கொடுத்தனர்.
அதனை எதிர்த்து, ட்ரோன் உதவியுடன் இந்திய நிலைகள் மீது பொதுமக்கள் மீதும் வழிபாட்டு இடங்கள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. சீக்கியர்களின் தலைமை கோயிலாக கருதப்படும் அமிர்தசரஸ் பொற்கோயில் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலை, இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது. தொடர்ந்து 4 நாட்கள் இரு நாடுகளும் எதிரெதிர் தாக்குதல்களை நடத்திய நிலையில், போர் நிறுத்த ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இருப்பினும் ஆபரேஷன் சிந்தூர் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்தியா அறிவித்தது. அமிர்தரஸ் தாக்குதல் முயற்சியை போல், தாக்குதல் முயற்சிகளை பாகிஸ்தான் வரும் காலத்தில் நடத்தலாம் என உளவுத்துறையினர் கணித்துள்ளனர். தாக்குதல் நடத்த வாய்ப்புள்ள நினைவுச் சின்னங்களில் ஒன்றாக தாஜ்மகால் பட்டியலிடப்பட்டுள்ளது. தாஜ்மகாலுக்கு உலகம் முழுவதும் இருந்து நாள்தோறும் பல்லாயிரக்கணகான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
மத்திய தொழில் பாதுகாப்பு படை மற்றும் உத்தரபிரதேச மாநில போலீசார் தாஜ்மகாலை பாதுகாத்து வருகின்றனர். உளவுத்துறை கணிப்பை முன்னிட்டு தாஜ்மகாலுக்கு ட்ரோன் தடுப்பு கவச பாதுகாப்பு வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. ஆயுதங்களுடன் ஏவப்படும் ட்ரோன்களை முறியடிக்கும் வகையில் இந்த நவீன பாதுகாப்பு கவசம் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.