இன்றைய நவீன உலகில், ஐடி நிறுவனங்களில் பணியாற்றும் இளைஞர்கள் ஆடம்பரமான வாழ்க்கையை விரும்புவது வழக்கமாகிவிட்டது. ஆனால், கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஒரு மணமகன், தனக்குப் பரிசாகக் கிடைத்த சொகுசு காரைத் தவிர்த்துவிட்டு, மாட்டு வண்டியில் மணமகளை அழைத்துச் சென்று அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.
கிணத்துக்கடவு சொலவம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் அருண் விக்ரம் என்பவருக்கும், கோவையைச் சேர்ந்த ஐடி பணியாளர் விகாஷினிக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. மணமகள் வீட்டார், தம்பதியினரின் பயன்பாட்டிற்காகப் புதிதாக ஒரு சொகுசு காரைப் பரிசாக வழங்கினர். இருப்பினும், தனது மூதாதையர்கள் பயன்படுத்திய பாரம்பரியத்தைக் கடைப்பிடிக்க விரும்பிய அருண் விக்ரம், காரில் செல்ல மறுத்துவிட்டார்.
திருமணம் முடிந்ததும், தனது பண்ணை வீட்டிற்குச் செல்வதற்காக அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியொன்றை தயார் செய்தார். மணமகளை வண்டியில் அமர வைத்து, அவரே மாட்டு வண்டியைச் செலுத்தத் தொடங்கினார். அவர்களுக்குப் பின்னால் உறவினர்கள் கார்களில் அணிவகுத்து வர, மாட்டு வண்டியில் தம்பதியினர் கம்பீரமாகப் பயணித்தனர்.
நவீன வசதிகள் கையில் இருந்தும், கலாச்சாரத்தின் மீது கொண்ட பற்றால் இந்தத் தம்பதியினர் மேற்கொண்ட இந்த எளிய பயணம், அந்தப் பகுதி மக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. மாட்டு வண்டியில் வந்த புதுமணத் தம்பதியினரைச் சாலையோர மக்கள் வியப்புடன் பார்த்தும், நெகிழ்ச்சியுடன் வாழ்த்தியும் அனுப்பி வைத்தனர்.
